நான் (இ)ரசித்தவை

இங்கே என் ரசனைகள் சில...உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.

நினைவிருக்கிறதா..



நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டிற்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத மழை நாட்களை
உனக்கு நினைவிருக்கிறதா?

“ இந்த டிரஸ் போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னை பார்த்துவிடுகிறேன்” என்றுஅடிக்கடி
போட்டுக்கொள்வாயே அந்த
மாம்பழ நிற பட்டுப்பாவாடையை
நினைவிருக்கிறதா?

உனக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும்
அம்மா பார்க்கமுடியாது என்ற தைரியத்தில்
எதிரில் இருந்த என்னை பார்த்து
கண்சிமிட்டி “ எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?

நாளிதழ் வந்ததும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
வாரபலன்கள் பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

ஒருமுறை உன் நிறத்திலேயே
சட்டை போட்டு வந்து‘ பார்த்தாயா ‘
என்று காலரை தூக்கிவிடபோது
பார்த்துவிட்ட அக்காவுக்காக
அடிக்கடி காலரைதூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?

துணி உலர்த்த மாடிக்கு போகும் போதெல்லாம்
‘ ஏண்டி இப்படி ஊருக்குகேக்குற மாதிரி கத்தற ‘
என்றுஉன் அம்மா திட்டுவார்களே
நினைவிருக்கிறதா?

நீ ‘ மணியக்கா வீட்டுக்குபோகனும்’ என்றதும்
நான் கடை கடையாகத் தேடி கேரியர்
இல்லாமல் எடுத்து வந்த வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்டபோதெல்லாம்
‘ அவிய இருக்காக இவிய பாக்ராக ‘ என்று
ஏதேனும் சொல்லித்தட்டிவிட்டு
முதன் முதலாக என்கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு ஓடினாயே
நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின் காதில் விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?

என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்
என்று நீ கேட்டதற்கு
நான் பதில் சொன்ன பிறகு
என்னைக் கடந்து செல்லும் பொழுதெல்லாம்
பாத்திரம், புத்தகம், கைகள் என்று
எதைக்கொண்டாவது மறைத்துக்கொண்டாயே
நினைவிருக்கிறதா?

‘ நேத்து யெல்லாரும் ஒறங்குன பொறவு
மச்சில யாரோ நடமாடுத சத்தம் கேட்டுது ‘
என்று அத்தை கூறியதை ஒன்றும
தெரியாதது போல் கேட்டுக்கொண்டிருந்தோமே
நினைவிருக்கிறதா?

தொலைபேசியில் நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்குஎன்ன செய்வதென்று தெரியாமல்
‘ தேங்ஸ் ‘ என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?

நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன்மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருகிறதா?

சமிபத்தில் வாசித்த கவிதைகளில் நான் ரசித்த கவிதைகள்.
எழுதியவரின் விபரம் தெரியவில்லை.

0 comments:

Post a Comment